
பால், நெய், சிறு பயறு வகை, பழங்கள், தேன் கற்பத்திற்கு உண்ணக் கூடியவை என்றும், புளி சேர்க்காமல் சாப்பிட முடியாதவருக்கு புளியாக் கீரை, பசலைக் கீரைகளை சேர்த்துக் கொள்ளலாம் என்றும், கரும்பும், இளநீரும் , குளிர் நீரும் சேர்க்கக் கூடாது என்றும் போகர் சொல்கிறார்.
மேலும் கற்பம் உண்ணும் காலத்தில் குடிப்பதற்க்கு நீர் தயாரிக்கும் முறை ஒன்றும் சொல்கிறார்கள் சித்தர்கள். அது அருகம்வேர் ஒரு கை அளவும், மிளகு 25 தும் சேர்த்து இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு நீரை விட்டு அதை எட்டில் ஒன்றாகக் காய்ச்சி, வடிகட்டிப் பருகலாம் என்கிறார்கள்.
"யோகமாம் புளியுப்பு எண்ணெய் சுண்ணம்
உரிசையா மாங்கிசங்கள் மச்சமாகா
மோகமா மோரோடு கடுகு உள்ளி
முதிரான காரமமொடு பெருங்காயந்தான்
போகமாய் பெண்ணுட புணர்ச்சியோடு
பேரான நித்திரையும் சோம்பல் தள்ளி
வாகமாம் வாசிதனை மறித்துக் கொண்டு
மறவாமல் இரவு பகல் மனது உன்னே"
புளி, உப்பு, எண்ணைவகை, மோர், கடுகு, உள்ளி, மது, மங்கை, மாமிசம் புசித்தல், அதிக காரமும், பெருங்காயமும், நேரம் தவறி உறங்குதல், சோம்பல்குணம், இரவு பகல் எந்நேரமும் காய கற்பம் உண்பதை நினைத்திருந்து இவற்றை கட்டாயம் நீங்க வேண்டும்.
"உன்னியே பாலோடு நெய்யைக் கூட்டு
ஒருசேர சமைத்துண்டு ஒரு போதையா
பண்ணியே ராமாறு பாலைக்கொள்ளு
பணியாரம் சிறு பயறு பழமும் தேனாம்
குன்னியே கோரக்கர் கற்பமாகும்
போமென்ற புளிமேல் ஆசையானால்
புளியாரை புளியரணை சீக்காய்க்கொழுந்து
நேமென்ர நெல்லிக்காய் பசலைக் கீரை
நித்தியமாய்க் கூட்டியே கற்பமுண்ணு
ஆமென்ற பயரோடு யிளநீருங்கரும்பும்
ஆகாது குளிர்ந்த தண்ணீர் தானுங்காணே"