
வேறு பெயர்-முண்டகம் என இலக்கியத்தில் அழைப்பர்.
பயன்தரும் பாகங்கள் -: செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது.
மருத்துவப் பயன்கள் -: பொதுவான குணம். சிறு நீரைப் பெருக்கும். வியர்வையை மிகுவிக்கும். உடலை ஊட்டம் பெறவைக்கும். வெண் குட்டம், மேகநீர், சொறி சிரங்கு, சிறு நீர் தாரை எரிச்சல், தாதுக்கள் அழுகி விடுவதைத் தவிர்க்கும், விதை காமம் பெருக்கியாகும், தலைவலி, காய்ச்சல், மலச்சிக்கல் போம். குளிர்ச்சி தரும்.
நீர்முள்ளிச் சமூலம் நன்கு அலசி இடித்து 200 கிராம், 2 லிட்டர் நீரில் போட்டுச் சோம்பு, நெருஞ்சில் விதை, தனியா வகைக்கு 50 கிராம் இடித்துப் போட்டு, அரை லிட்டராகக்காய்ச்சி (நீர்முள்ளி குடிநீர்) வேளைக்கு 125 மில்லி வீதம் தினம் 4 வேளை கொடுத்துவர ஊதிப் பருத்த சரீரம் குறையும். வாத வீக்கம், கீல் வாதம், நரித்தலைவாதம், நீர் வழி அடைப்பு, நீர் வழி ரணம், அழற்சி 3 நாளில் தீரும். 10, 12 நாள் கொடுக்க மகோதரம் தீரும்.
விதையைப் பொடித்து வேளைக்கு அரை முதல் 1 கிராம் வரை பாலில் கலந்து சாப்பிட்டு வர மேகம், வயிற்றுப் போக்கு, நீர் கோவை, இரைப்பிருமல், ஆகியவை தீரும். குருதித் தூய்மையடைந்து விந்தூறும்.
வேர் மட்டும் 10 பங்கு கொதி நீரில் போட்டு 24 மணி நேரம் ஊற வைத்துத் தெளிவு நீரை 2 மணிக்கு ஒரு முறை 30 மி.லி. கொடுத்துவர நீர்க்கோவை, மகோதரம் தீரும்.
நீர் முள்ளி விதை 40 கிராம் , நெருஞ்சில் விதை 20 கிராம் , வெள்ளரிவிதை 10 கிராம் சிதைத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி.யாகக் காய்ச்சி, பனங்கற்கண்டு கலந்து 1 வாரம் காலை மாலை கொள்ள துர் நீர் கழியும் . நீர் எரிச்சல், மேக நீர், வாத நீர், உடல் காங்கை நீங்கிச் சப்தத்தாதுக்களும் வலுவடைந்து உடல் பலம், தாதுப் பலம் உண்டாகும்.
ஒரு லிட்டர் கழுநீரில் நீர் முள்ளி உலர்த்திய இலை 100 கிராம், நாயுருவி 50 கிராம் போட்டு இரண்டு நாள் ஊறவிடவும். இக்குடிநீரை மூன்று நாள் இரு வேளை 50 மி.லி. கொடுக்கவும். இதனால் நீரடைப்பு கல்லடைப்பு, உடலில் ஏற்படும் எல்லா வீக்கமும் நீர்க் கோர்வையும் குணமாகும்.
நீர் முள்ளி விதை 30 கிராம் , பாதாம்பருப்பு 10 கிராம் , கசகசா 10 கிராம் ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்துக் காயச்சி பாலுடன் சேர்த்துக் குடித்து வர தாது விருத்தி ஏற்படும். விந்து கழிவு நிற்கும். கலவி இன்பம் மிகும்.
பிரண்டை உப்பு தயாரிப்பது போலவே இதனையும் உலர்த்தி, இருத்துச் சாம்பலைக் கரைத்து வெயிலில் பற்றவைத்து உப்பு எடுக்க வேண்டும். 2-3 கிராம் உப்பை நீரில் கரைத்து காலை, மாலை கொடுக்க உடல் எடை குறையும். நீர்க் கோர்வை, மகோதரம், நீரடைப்பு குணமாகும்.
“பாண்டு குறுப்பையறும், பாரில் வருநீரேற்றம்
மாண்டுவிடும் நீர்க்கட்டு மாறுங்காண்-பூண்தொரு
வீக்கமெல்லாம் நீராய் வடுமே நீர்முள்ளிக்கு.”